உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன் போட்டியில் அடுத்தடுத்த பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை சாஜன் பன்வால் படைத்துள்ளார்.
ஸ்லோவோக்கியாவின் டிநாவா நகரில் உலக ஜூனியர் மல்யுத்த போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கிரெக்கோ ரோமன் 77 கிலோ பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின சாஜனும், ரஷிய வீரர் இஸ்லாம் ஓபியோவும் மோதினர். இதில் கடுமையாக போராடிய நிலையிலும் சாஜன் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இவர் ஏற்கெனவே பின்லாந்தில் கடந்த 2017 உலக ஜூனியர் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் அடுத்தடுத்த பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஹரியாணா சோனிப்பட்டைச் சேர்ந்த பன்வால் (20) ஆசிய ஜூனியர் போட்டியில் தங்கம் வென்றவர்.
மற்றொரு இந்திய வீரர் விஜய் கிரெக்கோ ரோமன் 55 கிலோ பிரிவில் துருக்கியின் லிமானை 16-8 என வீழ்த்தி வெண்கலம் வென்றார்.