யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆட்டத்தின் இடையே வீரருக்கு அறிவுரை கூறிய ஸ்வீடன் நடுவர் முகமது லயானி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கடந்த மாதம் நியூயார்க்கில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆஸி. நிக் கிரிஜியோஸ்-ஹியுக் ஹெர்பர்ட் ஆகியோர் இடையிலான இரண்டாம் சுற்று ஆட்டம் நடைபெற்றது. அப்போது கிரிஜியோஸ் பின்தங்கி இருந்த நிலையில் மரபுகளை மீறி நடுவர் லயானி இருக்கையில் இருந்து கீழே இறங்கி வந்து கிரிஜியோஸுக்கு அறிவுரை கூறினார்.
இது டென்னிஸ் வட்டாரத்தில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. நடுவர் லயானிக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இறுதியில் அந்த ஆட்டத்தில் கிரிஜியோஸ் வென்றார்.
நடுவரின் செயல்பாடு மரபுகளை மீறிய செயல் என யுஎஸ் ஓபன் நிர்வாகம் கூறியிருந்தது. இந்நிலையில் ஏடிபி அமைப்பு இதுதொடர்பாக விசாரணை நடத்தி லயானியை 2 வாரங்கள் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதனால் அவர் சீனா ஓபன், ஷாங்காய் மாஸ்டர்ஸ் போட்டிகளில் நடுவராக பணிபுரிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.