கண்ணீர் விட்ட இளம் இந்திய ரசிகருக்கு ஆறுதல் அளித்த ஆப்கானிஸ்தான் வீரர்கள்!
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் ஃபோர் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் ஃபோர் பிரிவு ஆட்டம் செவ்வாய்க்கிழமை துபையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கன் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு ஆப்கன் அணி 252 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர் ஷஸாத் அபாரமாக ஆடி 7 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 116 பந்துகளில் 124 ரன்களை எடுத்தார். இந்திய அணி, 49.5 ஓவர்களில் 252 ரன்களுடன் ஆல் அவுட்டானது. இதனால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
இந்நிலையில் ஜடேஜா அவுட் ஆனவுடன் மைதானத்தில் இருந்த ஒரு சீக்கிய சிறுவன் மிகவும் கவலையடைந்து அழுதான். இக்காட்சி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது. அருகில் இருந்தவர் சிறுவனைத் தேற்றிய காட்சியும் காண்பிக்கப்பட்டது மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்தது. இச்சிறுவனுக்கு ஆறுதல் அளிக்கும்விதமாக ஹர்பஜனும் ட்வீட் ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் அச்சிறுவனை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்துள்ளார்கள் ஆப்கானிஸ்தான் வீரர்களான ரஷித் கானும் மொகமது ஷசாத்தும் அச்சிறுவனைத் தேற்றும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இதையடுத்து இரு ஆப்கானிஸ்தான் வீரர்களுக்கும் அதிகப் பாராட்டுகள் கிடைத்துள்ளன.