இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய சூப்பர் ஃபோர் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான சூப்பர் ஃபோர் பிரிவு ஆட்டம் செவ்வாய்க்கிழமை துபையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆப்கன் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு ஆப்கன் அணி 252 ரன்களை எடுத்தது. தொடக்க வீரர் ஷஸாத் அபாரமாக ஆடி 7 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 116 பந்துகளில் 124 ரன்களை எடுத்தார். இந்திய அணி, 49.5 ஓவர்களில் 252 ரன்களுடன் ஆல் அவுட்டானது. இதனால் ஆட்டம் சமனில் முடிவடைந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட்டுகளில் தோனி, தினேஷ் கார்த்திக் ஆகியோர் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்கள். ஆனால் இருவருமே டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்தியிருந்தால் ஆட்டமிழந்திருக்க மாட்டார்கள். இரண்டிலும் கள நடுவர் தவறு செய்திருந்தார். ஆனால் இந்திய அணி வசம் ரெவ்யூஸ் எதுவும் மிச்சம் இல்லாததால் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் போனது. இருந்த ஒரு ரெவ்யூவையும் ராகுல் தவறுதலாகப் பயன்படுத்தியிருந்தார். இதுகுறித்து ராகுல் கூறியதாவது:
ஒரே ஒரு ரெவ்யூ மட்டும் இருக்கும்போது அதைச் சரியாகப் பயன்படுத்துவது கடினம் தான். இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நான் அவுட் ஆனபோது ரெவ்யூவைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது எனத் தோன்றுகிறது. அவுட்சைடில் பந்து பட்டதாக எண்ணியதால் அதைப் பயன்படுத்தினேன். வெளியே வந்தபிறகுதான் அதுகுறித்து யோசிக்கத் தோன்றுகிறது. இதிலிருந்து நாங்கள் கற்றுக்கொள்கிறோம். பின்னால் வருகிற வீரர்களுக்கு நான் அதை விட்டுத் தந்திருக்கவேண்டும். இனிமேல் இதுபோல நடந்தால் நான் கவனமாக இருப்பேன் எனக் கூறியுள்ளார்.