இந்தியா மீண்டும் அபாரம்: 4-1 என தொடரை வென்று அசத்தல்

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என வென்றது. 
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி


நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என வென்றது. 

நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான கடைசி ஒருநாள் போட்டி வெல்லிங்டனில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கடந்த போட்டியை போலவே இந்திய அணியின் டாப் ஆர்டர் இந்த போட்டியிலும் சொதப்பியது.  ரோஹித் 2, தவான் 6, ஷூப்மன் கில் 7, தோனி 1 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி 18 ரன்களுக்குள் 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

அப்போது, அம்பதி ராயுடுவுடன் விஜய் ஷங்கர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 10 ஓவருக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணியை இருவரும் 30 ஓவர் வரை மேற்கொண்டு விழாமல் பார்த்துக்கொண்டு அந்நேரத்தில் அவசியமான பங்களிப்பை ஆற்றினர். இந்த ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 98 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், விஜய் ஷங்கர் 45 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். 

அதன்பிறகு, ராயுடுவுடன் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். பவர்பிளே வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இந்த ஜோடி துரிதமாக ரன் குவிக்க தொடங்கியது. அதுவரை நிதானமாக விளையாடி வந்த ராயுடு அதிரடிக்கு மாறினார். இதனிடையே, அவர் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 10-ஆவது சதத்தை பதிவு செய்தார். 

இதையடுத்து, ராயுடு பவுண்டரிகளாக விரட்ட ஜாதவ் அவ்வப்போது பவுண்டரி அடித்து ஒத்துழைக்க இந்திய அணியின் ஸ்கோர் உயர்ந்தது. சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராயுடு 90 ரன்கள் எடுத்திருந்த போது பவுண்டரி அடிக்க முயன்றி ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து, சற்று நேரத்தில் 34 ரன்கள் எடுத்திருந்த ஜாதவும் ஆட்டமிழந்தார்.   

அடுத்தடுத்து 2 விக்கெட் விழுந்ததால், இந்திய அணிக்கு மீண்டும் நெருக்கடி தர நியூஸிலாந்து முயன்றது. ஆனால், பாண்டியா ஆஸ்ட்லே பந்தில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்து மிரட்டினார். தனது அதிரடியை தொடர்ந்த ஹார்திக் பாண்டியா 22 பந்துகளில் 2 பவுண்டரிகள், 5 சிக்ஸர் உட்பட 45 ரன்கள் எடுத்தார். இவரது அதிரடியால் இந்திய அணி 250 ரன்களை கடந்தது. 

49.5 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 252 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து தரப்பில் ஹென்ரி 4 விக்கெட்டுகள், போல்ட் 3 விக்கெட்டுகள், நீஷம் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

253 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களமிறங்கியது. இந்த போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்பிய ஷமி, தொடக்க ஆட்டக்காரர்களான நிகோல்ஸ் மற்றும் முன்ரோவை வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய டெய்லரை பாண்டியா ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம், அந்த அணியும் 38 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 

இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் வில்லியம்ஸனும் ரன் குவிக்க மிகவும் திணறினார். எனினும், வில்லியம்ஸன் மற்றும் லாதம் விக்கெட் விழாமல் விளையாடினர். 39 ரன்கள் எடுத்திருந்த வில்லியம்ஸன் ஜாதவ் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று தவான் வசம் சிக்கினார். இதனால், அந்த அணி மீண்டும் நெருக்கடிக்குள்ளானது. 

இந்த நிலையை பயன்படுத்திக்கொண்ட சாஹல் லாதம் மற்றும் கிராண்ட்ஹோமை அடுத்தடுத்து வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதன்பிறகு களமிறங்கிய நீஷம் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து இந்திய அணியை மிரட்ட, அவரும் 32 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தபோது தோனியின் சாமர்த்தியத்தால் ரன் அவுட் ஆனார்.

அதன்பிறகு, ஆஸ்ட்லே 10, சான்ட்னர் 22, போல்ட் 1 என ஆட்டமிழக்க அந்த அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி சார்பில் சாஹல் 3 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் கேதார் ஜாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 4-1 என வென்றது. ஆட்டநாயகன் விருதை அம்பதி ராயுடு வென்றார். தொடர் நாயகன் விருதை முகமது ஷமி வென்றார். 

இதைத்தொடர்ந்து, இரு அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் 6-ஆம் தேதி தொடங்குகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com