தேசிய நடை ஓட்டப்பந்தயம்: ஜிதேந்தர் முதலிடம்
தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் நடத்தப்பட்ட 6-ஆவது தேசிய நடை ஓட்டப்பந்தயத்தில் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜிதேந்தர் ஆடவர் 50 கி.மீ பிரிவில் முதலிடம் பெற்றார்.
ஞாயிற்றுக்கிழமை சென்னை அண்ணா சாலையில் இந்திய தடகள சம்மேளன செயலர் வல்சன், தமிழ்நாடு சங்க செயலாளர் லதா ஆகியோர் தொடங்கி வைத்தனர். 50 கி.மீ, 10 கி.மீ என இரு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. 50 கி.மீ பிரிவில் ஆடவரும், 10 கி.மீ பிரிவில் 20 வயதுக்குட்பட்ட ஆடவரும், மகளிரும் பங்கேற்றனர்.
50 கி.மீ பிரிவில் ராஜஸ்தான் வீரர் ஜிதேந்தர் சிங் 4 மணி, 23 நிமிடம், 23 விநாடிகளில் கடந்து முதலிடம் பெற்றார். குஜராத் ஜோஷி சாகர், ஹரியாணாவின் பவன்குமார் இரண்டு, மூன்றாவது இடங்களைப் பெற்றனர்.
10 கி.மீ ஆடவர் பிரிவில் சுராஜ் பன்வார் (உத்தரகாண்ட்), ஜூனத் (ஹரியாணா), பார்மன் அலி (உபி) முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். மகளிர் பிரிவில் ரோஹி பாட்டீல் (உத்தரகாண்ட்), சுவப்னா (ம.பி), குர்ப்ரீத் கெளர் (பஞ்சாப்) முதல் மூன்றிடங்களைப் பெற்றனர்.
ஜெம் மருத்துவமனை டாக்டர் செந்தில்நாதன், தடகள சங்க நிர்வாகிகள் பரிசளித்தனர்.