உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதை தவிர்த்து அந்த அணிக்கு 2 புள்ளிகளை வழங்குவதை வெறுக்கிறேன் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடக் கூடாது என்கிற கருத்துகள் எழுந்தது. இந்நிலையில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30-ஆம் தேதி தொடங்குகிறது. இதில், ஜூன் 16-ஆம் தேதி தொடரின் 22-ஆவது போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
எனவே, உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி விளையாடக் கூடாது என்கிற பேச்சுகள் பரவலாக ஒலித்து வருகிறது.
இந்த சூழலில், பிசிசிஐயின் நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் இதுகுறித்து இன்று பேட்டியளிக்கையில்,
"உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. எங்களுடைய நிலைமையை ஐசிசிக்குத் தெரிவிப்போம். இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ஆட்டம் குறித்து அரசிடம் பேசிவருகிறோம். தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐசிசிக்குக் கடிதம் எழுதவுள்ளோம்" என்றார்.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறிய கருத்து,
"உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி எப்போதும் வெற்றியையே பெற்றுள்ளது. அவர்களை மீண்டும் வீழ்த்துவதற்கான நேரம் இது. அவர்களுக்கு 2 புள்ளிகளை வழங்கி உலகக்கோப்பை தொடரில் உதவுவதை நான் வெறுக்கிறேன்.
நான் சொன்னது போல் எனக்கு எப்போதுமே இந்தியா தான் முதன்மை. அதனால், என் நாடு எந்த முடிவு எடுத்தாலும் அதை மனப்பூர்வமாக ஆதரிப்பேன்" என்றார்.
முன்னதாக, ஹர்பஜன் சிங் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் போன்ற வீரர்கள் பாகிஸ்தானுடனான அனைத்து வித கிரிக்கெட்டையும் புறக்கணிக்கவேண்டும் என்றனர். அதேசமயம், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், "பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை புறக்கணித்தால் இந்தியாவுக்கு தான் தோல்வி. காரணம், புறக்கணிப்பதால் பாகிஸ்தானுக்கு 2 புள்ளிகள் கிடைத்துவிடும்" என்றார்.