2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிக்கு 299 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலியா.
கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வரும் ஆஸி. சுற்றுப்பயணத்தின் நிறைவாக 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடர் கடந்த 12-ஆம் தேதி சிட்னியில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் ஆஸி. 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதில் கோலி, தவன், ராயுடு உள்ளிட்டோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதமடித்தும் வெல்ல முடியவில்லை. தோனி மிதமாக ஆடி 51 ரன்களை எடுத்தார்.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் ஆட்டம் அடிலெய்டில் இன்று துவங்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கலில் அகமதுவுக்கு பதிலாக முகமது சிராஜ் அறிமுகமாகிறார். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 298 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷான் மார்ஷ் 131, மேக்ஸ்வெல் 48 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் புவனேஸ்குமார் 4, முகமது ஷமி 3 விகெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 299 ரன்களை ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.
தொடரை கைப்பற்ற இந்த ஆட்டத்தின் வெற்றி முக்கியம் என்பதால் இந்தியா போராடும் எனத் தெரிகிறது.