சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) புதிய தலைமை செயல் அலுவலராக சிங்கப்பூரின் மானு சாஹ்னி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐசிசியின் தற்போதைய சிஇஓ டேவிட் ரிச்சர்ட்ஸன் பதவிக்காலம் வரும் ஜூலையோடு முடிவடைகிறது.இந்நிலையில் ஐசிசி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மேலாண் இயக்குநர் மானு சாஹ்னியை புதிய சிஇஓவாக நியமிக்கும் முடிவுக்கு ஐசிசி தலைவர் ஷசாங்க் மனோகர் தலைமையிலான நியமனக் குழு ஒப்புதல் அளித்தது. வரும் ஜூலை மாதம் மானு பொறுப்பேற்பார்.
இதுதொடர்பாக ஷசாங்க் மனோகர் கூறியதாவது-
மானு நியமிக்கப்பட்ட ஐசிசிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும். தலைமைபப் பொறுப்பில் அவர் தனது 22 ஆண்டுகள் அனுபவத்தை கொண்டு செயல்படுவார். நியமனக் குழு அவரது நியமனத்தை ஒருமனதாக ஏற்றுள்ளது. நான் மற்றும் இயக்குநர்கள் குழு மானுவுடன் பணிபுரிய காத்துள்ளோம்.
மானு சாஹ்னி கூறியதாவது: ஐசிசி பொறுப்பு கிடைத்தது மிகவும் கெளரவமான விஷயமாகும். சர்வதேச கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. நூற்றுக்கணக்கான கோடி ரசிகர்கள் இதில் உள்ளனர். ஐசிசி போர்ட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உலகம் முழுவதும் கிரிக்கெட்டை மேலும் பிரபலப்படுத்த தீவிர முயற்சி எடுப்பேன் என்றார். வரும் பிப்ரவரி மாதம் ஐசிசியில் இணையும் சாஹ்னி, ஜூலையில் முழுமையாக பொறப்பேற்பார்.