2-1: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்று இந்திய அணி சாதனை!

தோனி 87, ஜாதவ் 61 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்...
2-1: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்று இந்திய அணி சாதனை!

டெஸ்ட் தொடர் வெற்றிக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்று சாதனை படைத்துள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. 

இந்தியா - ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 1-1 என சமனில் முடிந்தது. பின்னர் நடைபெற்ற 4 ஆட்டங்கள் டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என கைப்பற்றி வரலாற்று வெற்றியை பெற்றது. 71 ஆண்டுகளில் முதன்முறையாக தொடரை கைப்பற்றியது. ஆஸியில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய முதல் இந்திய, ஆசிய கேப்டன் என்ற சிறப்பை கோலி பெற்றார்.

இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் ஆட்டம் மெல்போர்னில் இன்று நடைபெற்றது. மழையால் ஆட்டம் தாமதமாகத் தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் ராயுடு, சிராஜ், குல்தீப் ஆகியோருக்குப் பதிலாக ஜாதவ், விஜய் சங்கர், சாஹல் ஆகியோர் இடம்பெற்றார்கள்.

பந்துவீச்சுக்குச் சாதகமான சூழலில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார்கள். கேரி 5 ரன்களிலும் ஃபிஞ்ச் 14 ரன்களிலும் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு ஜோடி சேர்ந்த கவாஜாவும் மார்ஷும் அணியின் ஸ்கோரை 100 ரன்கள் வரை கொண்டுசென்றார்கள். அதுவரை பந்துவீசாமல் இருந்த சாஹலைப் பந்துவீச அழைத்தார் கோலி. முதல் ஓவரிலேயே மார்ஷை 39 ரன்களிலும் கவாஜாவை 34 ரன்களிலும் வீழ்த்தினார் சாஹல். இதையடுத்து அற்புதமான லெக் ஸ்பின் பந்துவீச்சால் 10 ரன்களில் ஸ்டாய்னிஸை வீழ்த்தினார் சாஹல்.

எனினும் நிலைமையைச் சரிசெய்யும்விதமாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் மேக்ஸ்வெல். கடகடவென 5 பவுண்டரிகள் அடித்தார். இதனால் ஆட்டத்தின் போக்கு லேசாக மாறத் தொடங்கியது. உடனே ஷமியைப் பந்துவீச அழைத்தார் கோலி. அதற்கு உடனே பலன் கிடைத்தது. புவனேஸ்வர் குமாரின் அற்புதமான கேட்சினால் 26 ரன்களில் வெளியேறினார் மேக்ஸ்வெல். இதன்பிறகு ஆஸி. அணியால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. ஜை ரிச்சர்ட்சன் 16 ரன்களிள் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடி ஆஸி. அணி 200 ரன்களைக் கடக்கக் காரணமாக இருந்த ஹேண்ட்ஸ்காம்ப் 57 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். அவர் மேலும் அதிக ரன்கள் சேர்க்காமல் 58 ரன்களில் சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஸாம்பா 8 ரன்களில் ஆட்டமிழக்க, 10 ஓவர்களில் 42 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் சாஹல். ஸ்டேன்லேக்கை போல்ட் செய்தார் ஷமி. இதன்மூலம் 48.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலிய அணி. சாஹல் 6, புவனேஸ்வர் 2, ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி இந்த ஆட்டத்தையும் தொடரையும் வெல்ல நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார்கள். 

இந்திய அணி விளையாடும்போது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரோஹித் சர்மா, 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு பவுண்டரியும் நடிக்காமல் 46 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த தவன், ஸ்டாய்னிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு ஜோடி சேர்ந்த கோலியும் தோனியும் மேலும் விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டார்கள். இருவரும் 74 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்கள். பிறகு இந்தமுறையும் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 46 ரன்களில் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய ரசிகர்கள் பதற்றம் அடைந்தார்கள். எனினும் தோனி ஆரம்பத்தில் தடுமாற்றத்துடன் விளையாடினாலும் (ஒரு கேட்சையும் ரன் அவுட்டையும் ஆஸி. வீரர்கள் தவறவிட்டார்கள்) பிறகு அணியின் இன்னிங்ஸை வழிநடத்தினார். அவர் 74 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். கடந்த வருடம் ஒரு அரை சதம் கூட எடுக்காத தோனி, இந்தத் தொடரில் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் எடுத்துள்ளார். 

இந்திய அணி 40 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. அப்போது தோனி 54, ஜாதவ் 29 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.

கெதர் ஜாதவ்வும் சற்று தடுமாற்றத்துடன் ஆரம்பித்து அதன்பிறகு தோனிக்கு நல்ல இணையாக விளங்கினார். முதலில் இருவரும் 58 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார்கள். இந்திய அணி 47-வது ஓவரில் 200 ரன்களை எட்டியபோது இந்திய ரசிகர்கள் தொடர் வெற்றியின் வாசனையை நுகர ஆரம்பித்தார்கள். எனினும் கடைசிக்கட்டத்தில் ஒரு ஓவருக்கு 8 ரன்களுக்கும் மேல் எடுக்கவேண்டிய நிலைமை இருந்தது. இதை தோனியும் ஜாதவ்வும் அருமையாக எதிர்கொண்டார்கள். நிறைய ஓடி ஓடி ரன்கள் சேர்த்தார்கள். சரியான இடைவெளியில் பவுண்டரிகள் அடித்து நம்பிக்கை ஏற்படுத்தினார்கள். 52 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார் ஜாதவ். அப்போது தோனி - ஜாதவ் கூட்டணி 108 பந்துகளில் 100 ரன்களைக் கடந்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது.  

49.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது ஒருநாள் ஆட்டத்தையும் ஒருநாள் தொடரையும் வென்றது இந்திய அணி. தோனி 87, ஜாதவ் 61 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஆட்ட நாயகன் விருது சாஹலுக்கும் தொடர் நாயகன் விருது தோனிக்கும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com