பளுதூக்குதலில் சீனா, வடகொரியாவைப் போல் இந்தியாவும் விரைவில் பலமான அணியாக மாறும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.
சமோவாவின் அபியா நகரில் அண்மையில் முடிந்த காமன்வெல்த் சாம்பியன் போட்டியில் இந்திய அணி ஜூனியர், யூத், சீனியர் பிரிவுகளில் பல்வேறு சாதனைகளை முறியடித்து 35 பதக்கங்களை வென்றது. இந்நிலையில் அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற ரிஜிஜு பேசியதாவது: இந்த போட்டியில் சிறப்பான சாதனைகளை செய்துள்ளீர்கள். விரைவில் நமது நாடும், சீனா, வடகொரியாவைப் போல் பலமான அணியாக திகழும். இந்திய அணிக்கு இதற்கான தகுதி உள்ளது. ஒலிம்பிக் போட்டியில் அதிக பதக்கம் வெல்ல வேண்டும் என விரும்புகிறேன்.
சர்வதேச போட்டிகளில் இந்தியா மெதுவாக தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்துகிறது. மீராபாய் சானு, ஜெரேமி லால்ரின்னுன்கா சிறப்பாக செயல்படுகின்றனர். காமன்வெல்த்தில் முதல் இடத்தில் உள்ளது நமது அணி. அடுத்த தலைமுறையான இளைஞர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் என்றார் ரிஜிஜு.