இந்திய மகளிர் அணிக்கு எதிரான 2-வது டி20யையும் வென்று தொடரை வென்றுள்ளது இங்கிலாந்து மகளிர் அணி.
குவாஹாட்டியில் நடைபெற்ற 2-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகள் இந்தமுறையும் பேட்டிங்கில் சொதப்பியதால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. மிதாலி ராஜ் மட்டும் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் பிரண்ட் 3 விக்கெட்டுகளையும் லின்சே ஸ்மித் 2 விக்கெட்டுகளையும் எடுத்தார்கள்.
இந்த எளிதான இலக்கை 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து அடைந்தது இங்கிலாந்து மகளிர் அணி. தொடக்க வீராங்கனை டேனியல் வியாட் 55 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் எடுத்துக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதையடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து மகளிர் அணி வென்றுள்ளது. 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது.