சென்னை: இன்று காலை முதல் நடைபெறும் வருமான வரி சோதனையானது, ஓபிஎஸ், இபிஎஸ்ஸை கைப்பொம்மைகளாக கொண்டு நடத்தும் ஒரு நாடகம் என்று அதிமுக அம்மா அணியினைச் சேர்ந்த எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
இன்று தமிழகம் முழுவதும் ஒரே சமயத்தில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 'மாரத்தான் சோதனை' நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி அலுலவகத்தில் தொடங்கி கோடநாடு எஸ்டேட் வரை இந்த சோதனைப் பட்டியல் நீள்கிறது.
இந்நிலையில் இந்த சோதனைகள் குறித்து அதிமுக அம்மா அணியினைச் சேர்ந்த தேனி தொகுதி எம்.எல்.ஏ தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஓபிஎஸ், இபிஎஸ்ஸை கைபொம்மைகளாக கொண்டு மத்திய அரசு நடத்தும் ஒரு நாடகம்தான் இந்த வருமானவரி சோதனைகள். இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
கிட்டத்தட்ட 1000 பேருக்கும் மேல் சோதனையில் ஈடுபட்டது குறித்தும், அத்தனை சொத்துக்கள் உள்ளதா என்று எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், 'கிட்டத்தட்ட 160-க்கும் மேற்பட்ட நபர்கள் தொடர்பாக சோதனைகள் நடைபெறுகிறது. ஆனால் அதில் கிட்டத்தட்ட 10 பேர்தான் நேரடியான தொடர்புடையவர்கள். இதனை கருப்பு பண ஒழிப்பு என்று கூறுபவர்கள், அப்படியானால் பண மதிப்பிழப்பு நடவடிகை குறித்து என்ன கூறுகிறார்கள்?
இந்த சோதனைகளை எல்லாம் எங்களை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறுகின்றன.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.