நடிகர் விஜய் நடிப்பில் மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமியை நடிகர் விஜய் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.
நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் தேனான்டாள் நிறுவன தயாரிப்பில் 120 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் மெர்சல்.
இப்படத்தில் விஜய் ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தீபாவளி அன்று இத்திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவால் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மெர்சல் என்ற தலைப்பில் முதல் சிக்கல் துவங்கியது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இதை விசாரித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இருப்பினும் படத்துக்கு இன்னும் தணிக்கைக் குழு சான்று அளிக்கவில்லை. எனவே படத்தை தீபாவளியன்று வெளியிடுவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்துக்குச் சென்று நடிகர் விஜய் திடீரென சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் போது அமைச்சர் கடம்பூர் ராஜு உடனிருந்தார்.