தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ஆம் தேதி தொடங்க உள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 11 முதல் 13 -ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த இடங்களுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவக் கல்வி தேர்வுக்குழு செயலர் டாக்டர் ஜி.செல்வராஜன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு மருத்துவக் கல்லூரிகள், தொழிலாளர் ஈட்டுறுதி கழக மருத்துவக் கல்லூரி, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ். இடங்களுக்கான இறுதிகட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 21-ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கலந்தாய்வு அட்டவணை www.tnhealth.org www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விரைவில் வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கால அவகாசம் நீட்டிப்பு: இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்தவர்கள் அந்தந்தக் கல்லூரியில் சென்று சேர வெள்ளிக்கிழமை கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவின் காரணமாக வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதால், கல்லூரியில் சென்று சேருவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சனிக்கிழமை (ஆக.18) மாலை 5 மணிக்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.