சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையின் வியாழன் நள்ளிரவு துவங்கி பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை பெய்தது.
குறிப்பாக சைதாப்பேட்டை, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், தி.நகர், நந்தனம் ஆகிய பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், பம்மல், அனகாபுத்தூர் பகுதிகளிலும் மழை பெய்தது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக பகுதியில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது. ஓரிரு இடங்களில் கன மழை பெய்துள்ளது.
அதிகபட்சமாக சிதம்பரம், விழுப்புரம் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. திருச்சுழி 5 செ.மீ, மயிலாடுதுறை, ஏற்காடு, சென்னை மாதவரம், உளுந்தூர்ப்பேட்டை, சீர்காழி, திருக்கோவிலூர் ஆகிய பகுதிகளில் 4 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு முறை மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.