மதுரை: மதுரையில் டிசம்பர் 10 முதல் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது நீதிபதிகள் சசிதரன் மற்றும் சுவாமிநாதன் கொண்ட அமர்வு முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில் வரும் டிசம்பர் 10ந்தேதி முதல் மதுரையில் பிளாஸ்டிக் உபயோகத்திற்கு தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்தும்படி மதுரை மாநகராட்சி ஆணையருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முதல் தடவையாக இந்தத் தடையை மீறினால் ரூ.500 அபராதமும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் அந்த தீர்ப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.