தமிழக காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள், காவலர்கள் போக்குவரத்து விதிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என டி.ஜி.பி.தே.க.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன் திங்கள்கிழமை அனைத்து காவல் ஆணையர்கள், மண்டல ஐ.ஜி.க்கள், சரக டி.ஐ.ஜி.க்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கையின் மூலம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், தமிழக காவல்துறையில் உள்ள அதிகாரிகள், காவலர்கள் அனைவரும் மோட்டார் வாகனச் சட்டத்தில் கூறியுள்ளபடி அனைத்து போக்குவரத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும். உயர் அதிகாரிகள், காவலர்களிடம் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கண்டிப்புடன் தெரிவிக்க வேண்டும். மேலும் அவர்கள், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்பதை கண்காணிக்கவும் வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீறினால் நடவடிக்கை: டி.ஜி.பி.யின் இந்த உத்தரவை செயல்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றாமல் மீறி செயல்பட்டால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.