தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் பிறந்த நாளான டிசம்பர் 19-இல் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு நிவாரண முகாம்களை நடத்த வேண்டும் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் பிறந்த நாள் டிசம்பர் 19-இல் வருகிறது. கருணாநிதியைவிட வயதில் மூத்தவர் அவர். பெரியாரின் வாழ்நாளையும் கடந்து வாழ்பவர். கஜா புயலின் தாக்கத்தாலும், தனது உடல்நிலை கருதியும் பிறந்த நாள் விழாவை முழுமையாகத் தவிர்த்திட விரும்புவது குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
திமுகவின் தலைவர் என்ற முறையில் என்னிடமும் அதனையே வேண்டுகோளாகவும் விடுத்திருந்தார்.
திமுகவினர் ஏற்கெனவே கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், க.அன்பழகனின் பிறந்த நாளான டிசம்பர்-19 அன்று சிறப்பு நிவாரண முகாம்கள் மூலம் நல உதவிகளை செய்திட வேண்டும். நேரில் வாழ்த்து தெரிவிப்பது என்ற பெயரில் உடல்நலம் குன்றியிருக்கும் க.அன்பழகனைச் சிரமப்படுத்த வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.