சாத்தூர்: கவனக்குறைவினால் ஹெச்.ஐ.வி பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு கூட்டு மருந்து சிகிச்சை துவங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் எட்டு மாத கர்ப்பிணிப் பெண் ஓருவர் மருத்துவ சோதனைக்கு சாத்தூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.அங்கு சோதனையில் அவருக்கு இரத்த சிவப்பு அனுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.
எனவே அவருக்கு உடனடியாக ரத்தம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அதன் பொருட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் இருந்து ரத்தம் வரவழைக்கப்பட்டு கடந்த 3-ஆம் தேதி அவருக்கு செலுத்தப்பட்டது.
இந்நிலையில் சிவகாசியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் வெளிநாட்டுக்குச் செல்வதற்காக அவருக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவருக்கு ஹெச்,ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.உடனடியாக மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் சமீபத்தில் வேறு யாருக்காவது ரத்த தானம் செய்துள்ளாரா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது.
அந்நிலையில்தான் அவர் கடந்த மாதம் 30-ஆம் தேதி சிவகாசி அரசு மருத்துவமனையில் ரத்த தானம் செய்திருப்பதும், அந்த ரத்தம்தான் சாத்தூர் மருத்துவனையில் எட்டுமாத கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
உடனடியாக அந்தப் பெண்ணுக்கு செய்யப்பட்ட சோதனையின் முடிவில் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மருத்துவமனை தரப்பில் விசாரிக்கப்பட்டு, பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதற்காக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர் வளர்மதி உட்பட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். தொடரும் விசாரணையில் மேலும் சில மருத்துவனை ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படலாம் என்று தெரிகிறது.
இந்நிலையில் கவனக்குறைவினால் ஹெச்.ஐ.வி பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு கூட்டு மருந்து சிகிச்சை துவங்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஆணையத் தலைவர் செந்தில் ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு தற்போது கூட்டு மருந்து சிகிச்சை துவங்கியுள்ளது.
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.
இருந்தபோதிலும் குழந்தைக்கு எந்த வித பாதிப்பு ஏற்படாத வகையில், பிரசவத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.