காவிரி விவகாரம் குறித்து விவாதிக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் வியாழக்கிழமை காலை 10:30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், விசிக தலைவர் திருமாவளவன், சீமான், ஜி.கே.வாசன், கி.வீரமணி, ஜி.கே.மணி, சரத்குமார், செ.கு.தமிழரசன், தமிமுன் அன்சாரி, வேல்முருகன், கிருஷ்ணசாமி, தனியரசு, ஈஸ்வரன், எல்.கே.சுதீஷ், காதர் மெகிதீன் உட்பட மொத்தம் 30 அரசியல் கட்சிகள், 9 அரசியல் அமைப்புகள், 54 விவசாய அமைப்புகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:
காவிரி விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தமிழக உரிமைகளை நிலைநாட்ட பாடுபட வேண்டும். அனைத்து கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து தமிழக மக்களின் நலனுக்காக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
முக்கியப் பிரச்னைகளில் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் பாடுபட வேண்டும். காவிரி நதிநீர்ப் பிரச்னை ஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்த பிரச்னை. காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சியினரின் கருத்துகளை ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்கப்பூர்வமான முறையில் தெரிவிக்கப்படும் கருத்துகளை சட்டவல்லுநர்களின் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.