திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம் பேரருவியில் திங்கள்கிழமை இரவு குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
கடந்த இரு தினங்களாக குற்றாலம் பகுதியில் பெய்த தொடர் சாரல் மழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. திங்கள்கிழமை மாலை பெய்த தொடர் மழை காரணமாக பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடைவிதித்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை வெள்ளத்தின் சீற்றம் தணிந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். காலை முதல் அவ்வப்போது மிதமான சாரல் மழையும், இலேசான வெயிலும், நாள் முழுவதும் குளிர்ந்த காற்றும் வீசியது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது.