சென்னை: நெடுஞ்சாலைத் துறை அரசு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் எஸ்பிகே கட்டுமானக் குழுமத்துக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் 81 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் சென்னை, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 30க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை 7 மணியில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
அரசு ஒப்பந்ததாரர் செய்யாத்துரை என்பவரது சென்னை வீடு மற்றும் அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதில் செய்யாத்துரையின் உறவினர் போயஸ் கார்டன் பகுதியில் உள்ள தீபக் என்பவரது காரில் இருந்து ரூ.28 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், செய்யாத்துரையின் உறவினர் சென்னை சேத்துப்பட்டுவில் ஜோஸ் என்பவர் வீட்டில் இருந்து 81 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.100 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 81 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைப்பற்றப்பட்ட ரூ.100 கோடி பணமும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாக இருந்ததாகக் கூறப்படுகிறது.