சென்னை: தீபாவளி சமயத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்ய மாட்டார்கள் என்று நம்புவதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஓய்வூதிய பணப் பலன்களை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தம் செய்ய உள்ளதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமைச் செயலகத்தில் வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்கு 20% போனஸ் இன்று வழங்கப்பட்டுள்ளது. முன்னரே கூறியிருந்தபடி தீபாவளி பண்டிகை நேரத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்ய மாட்டார்கள் என எதிர்பார்க்கிறோம்.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நாளை பண்டிகை முன்பணம் ரூ.45 கோடி வழங்கப்பட உள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
டிசம்பர் 2017 முதல் மார்ச் 2018 வரையிலான நான்கு மாதங்களுக்கு ஓய்வுபெற்ற ஊழியர்களின் நிலுவைத் தொகையாக ரூ.251 கோடி வரும் திங்கட்கிழமை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
அரசியின் வாக்குறுதியை மீறி தொழிலாளர்கள் ஒருவேளை போராட்டத்தில் ஈடுபட்டால், அதற்கான தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.