சென்னை: சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சத்துணவு பணியாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்க வேண்டும்; 21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்; ஓய்வுபெறும் அமைப்பாளர்களுக்கு ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சமும், சமையலர் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் கடந்த 25ஆம் தேதி முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். காத்திருப்பு போராட்டம், சாலைமறியல் என பல்வேறு வடிவங்களில் அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து வெள்ளியன்று அமைச்சர் சரோஜா கூறுகையில், 'சத்துணவு பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும். 7வது ஊதிய குழு பரிந்துரைப்படி ஊதிய விகிதம் மாற்றி இருப்பதை கருத்தில் கொண்டு கைவிடுங்கள்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சத்துணவு பணியாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.