சென்னை: நான் எந்த கட்சிக்கும் ஊதுகுழல் அல்ல என்று தனது பிறந்தநாளன்று நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல் தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனருமான கமல் புதனன்று தனது 64-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அதனையொட்டி ஆழ்வார்பேட்டையில் உள்ள காட்சிஅலுவலகத்தில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து, அவர்களது வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
விரைவில் நடைபெற உள்ள 20 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக இருக்கிறது. தேர்தலில் மக்கள் நல்ல பதிலைத் தருவார்கள் என்று நம்புகிறோம் . முறைகேடுகள் இல்லாத வழியில் தேர்தல்கள் நடைபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அரசியலிலும் சுகாதாரம் பேணப்பட வேண்டும்.
இலங்கை விவகாரத்தைப் பொறுத்த வரை ஜனநாயகம் என்றாவது ஒருநாள் அங்கு ஜெயிக்கும் என்று நம்புவோம்.
மக்கள் நீதி மய்யத்தைப் பொறுத்தவரை பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்று தெரியும். ஆனால் எதிர்பார்த்ததை விட வேகத்துடன் பயணித்து வருகிறோம்.
நான் எந்த கட்சிக்கும் ஊதுகுழல் அல்ல. நான் எப்போதும் மக்களின் கருவி.
தற்போது நான் தருமபுரி மாவட்டம் கிருஷ்ணகிரிக்குச் செல்ல உள்ளேன். நிறைய நல்ல செய்திகளுடன் திரும்புவேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.