சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் சென்னை - நாகப்பட்டினம் இடையே நவம்பர் 15ம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து 840 கி.மீ. தொலைவில் உள்ளது. இது நவம்பர் 15ம் தேதி முற்பகலில் சென்னை மற்றும் நாகப்பட்டினத்துக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி நவம்பர் 14ம் தேதி இரவு வரை புயல் கரையை கடக்கும் வரை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும்.
இந்தப் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே, மீனவர்கள் 15ம் தேதி வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கன மழையை பொறுத்தவரை தஞ்சை, திருவாருர், காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், புதுவை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கன மழையும், ஓரிரு இடங்களில் மிகவும் பலத்த மழையும் பெய்யக் கூடும்.
கடல் நீர் மட்டம் உயர்வதைப் பொறுத்தவரை, நாகப்பட்டினம், கடலூர், காரைக்கால் மாவட்டங்களில் இயல்பை விட 1 மீட்டர் அளவுக்கு கடல் நீர் மட்டம் உயரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் 14ம் தேதி இரவு முதல் மழை 16ம் தேதி வரை மழை பெய்யும். ரெட் அலர்ட் என்பதைப் பொறுத்தவரை அது பொதுமக்களுக்கானது அல்ல, முன்னேற்பாடுகள் செய்ய வேண்டிய நிர்வாகத் துறையினருக்கானது என்று தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த விளக்கத்தில், கஜா புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக வலுப்பெற்று மீண்டும் கரையை கடக்கும் முன்பே வலுவிழந்து வெறும் புயலாகவே கரையை கடக்கும். இது நவம்பர் 15ம் தேதி முற்பகலில் கரையை கடக்கும் என்று தெரிவித்துள்ளார்.