தருமபுரி மாவட்டம் அரூரில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ரமேஷ் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
12ம் வகுப்பு படித்து வந்த பழங்குடியின மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி கடந்த 10ம் தேதி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சதீஷ் என்பவர் நேற்று கைதான நிலையில் மற்றொரு குற்றவாளியான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார்.
அரூர் வட்டம், சிட்லிங் மலைக் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பிளஸ் 2 மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
இது தொடர்பாக, சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சதீஷ் (22), ரமேஷ் (22) ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் கோட்டப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மாணவி திடீரென உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர்கள் 3 பேர் தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, ஏற்காடு பகுதியில் உறவினர்கள் வீட்டிலிருந்த சிட்லிங் கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகன் சதீஷ் (22) நேற்று தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் பெருமாள் மகன் ரமேஷ் (22) சேலம் நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்துள்ளார்.