மதுரை மாவட்டம் பாலமேடு அருகே சத்திரப்பட்டி திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சர் அழகிரியின் ஆதரவாளருமான மதுரைவீரன் இன்று மர்ம கும்பலால் வெட்டி கொல்லப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு அடுத்த சத்திரப்பட்டி திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதுரைவீரன். இன்று காலை வீட்டின் முன்பு உள்ள டீக்கடை அருகே நின்றுகொண்டிருந்தபோது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. உடலின் பல இடங்களில் வெட்டுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்த மதுரைவீரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மதுரை வீரன் மத்திய முன்னாள் அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுபத்தி உள்ளது.
இந்நிலையில், முன்விரோதம் காரணமாக சத்திரப்பட்டியைச் சேர்ந்த ஜோதிமணி என்பவர் கூலிப்படை ஏவி கொலை செய்தது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.