அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகள்: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள உதவும் வகையில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகளை
அரசுப் பள்ளிகளில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகள்: அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள உதவும் வகையில் ஆங்கில பேச்சுத் திறன் பயிற்சி வகுப்புகளை ஏன் தொடங்கக் கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசுப் பள்ளிகள், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகள், 12,419 தனியார் (சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிகுலேஷன்) பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் சுமார் 1.25 கோடி மாணவர்கள் படித்து வருகின்றனர். தனியார் பள்ளிகளில் சுமார் 40 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.
 தமிழக அரசு கல்விக்காக ஆண்டுக்கு சுமார் ரூ.27,000 கோடி செலவிடுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இரண்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை தமிழக அரசின் கல்விக் கொள்கையின்படி முதல் மொழிப் பாடமாக தமிழும், இரண்டாவது மொழிப் பாடமாக ஆங்கிலமும் கற்பிக்கப்படுகிறது.
 தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றாலும், அவர்களால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் முடிவது இல்லை.
 மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பாடங்கள் ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுகின்றன; இதனால் தமிழ் வழியில் படித்த மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
 இவற்றைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு கடந்த 1991-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் அடிப்படையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது.
 மேலும், இந்த பள்ளிக்கூடங்களில் 50 சதவீதம் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்க அனுமதி வழங்கி கடந்த ஜூலை மாதம் தமிழக அரசு மற்றொரு அரசாணையைப் பிறப்பித்தது. ஆனால், இந்த விவரங்களைத் தெரியாமல் தனியார் பள்ளிகளுக்குச் செல்லும் பெற்றோர்கள், கல்விக்காக ஒரு குழந்தைக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை செலவழிக்கின்றனர். எனவே, தமிழ் வழியில் இரண்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம் சரளமாகப் பேசும் ("ஸ்போக்கன் இங்கிலிஷ்') பயிற்சி வழங்க வேண்டும். அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் தொடங்கக் கோரி அரசுக்கு மனு அளித்தேன். அந்த மனுவுக்கு இதுவரை பதில் அளிக்கவில்லை. எனவே, எனது கோரிக்கையைப் பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
 போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள...இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், தமிழ்வழியில் படிக்கின்ற மாணவர்களால் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாத காரணத்தால் அவர்களால் போட்டித் தேர்வுகளையும், மேல் படிப்புகளையும் எதிர்கொள்ள முடிவதில்லை.
 இதன் காரணமாக கேரளம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களே தொடர்ந்து போட்டித் தேர்வுகளில் முன்னிலை வகிக்கின்றனர் என வாதிடப்பட்டது.
 அரசுத் தரப்பு மறுப்பு: அப்போது அரசு தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், ஆங்கில வகுப்புகளைத் தொடங்க அனுமதியளித்து அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக கூறப்பட்டது.
 நீதிபதிகள் கேள்வி: இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. என்ற காரணத்துக்காக இந்த வழக்கை அரசியல் ரீதியாக பார்க்கக் கூடாது. இந்த வழக்கை அவர் பொதுநல நோக்கத்துடன் தாக்கல் செய்துள்ளார்.
 எனவே, அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் ஆங்கில பேச்சுத் திறன் வகுப்புகளை ஏன் தொடங்கக் கூடாது என்பது குறித்து தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை வரும் டிசம்பர் 6-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com