வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள "கஜா' புயல் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், காலை நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ. தொலைவில் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் "கஜா' புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை காணப்பட்டது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு, தென்கிழக்கு வங்கக் கடலில் திங்கள்கிழமை மையம் கொண்டது. இது சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ. தொலைவிலும், நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ., தொலைவிலும் உள்ளது. இது மேற்கு மற்றும் தென் மேற்கு நோக்கி நகர்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்றும். அதன்பிறகு வலுவிழந்து சாதாரண புயலாக கடலூருக்கும், பாம்பனுக்கும் இடையே வியாழக்கிழமை (நவ.15) நண்பகலில் கரையைக் கடக்கும்.
புயல் கரையைக் கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், ஒருசில வேளைகளில் 100 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வழக்கத்தைவிட ஒரு மீட்டர் உயரத்துக்கு கூடுதலாக அலைகள் எழக்கூடும். தற்போது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த புயல், மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், புயலின் வேகம் மேலும் குறைந்தால் கரையைக் கடக்க தாமதமாகும். இதன் காரணமாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், புதுச்சேரியின் சில இடங்களில் பலத்த மழையும், ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும் பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து 2 பேரிடர் மீட்பு குழுக்கள் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு சென்றுள்ளன.