கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தொடர்புடைய தீபு என்பவருக்கு பிடி ஆணை பிறப்பித்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டது.
நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்கி ஓய்வெடுத்த பங்களா உள்ளது. இந்த எஸ்டேட் காவலாளி கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கொல்லப்பட்டார். மேலும் பங்களாவுக்குள் இருந்த பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்த வழக்கில் கேரளத்தைச் சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்ஷேர் அலி, வாளையாறு மனோஜ், மனோஜ் சமி, குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு கோத்தகிரி நீதிமன்றத்திலிருந்து உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்துக்கு அண்மையில் மாற்றப்பட்டது. உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஒத்திவைக்கப்பட்ட இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மாவட்ட நீதிபதி பி.வடமலை விசாரணை மேற்கொண்டார். அப்போது, இவ்வழக்கில் ஆஜராகாத தீபுவுக்கு பிடி ஆணை பிறப்பித்தார். அத்துடன் இவ்வழக்கை டிசம்பர்10ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்று தீபுவை நேரில் ஆஜர்படுத்துமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார்.