"சர்கார்' திரைப்பட பிரச்னையில், தமிழக அமைச்சருக்கு சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள் குறித்து ஏதேனும் விவரங்கள் தெரிந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.
அண்மையில் வெளியான சர்கார் திரைப்படத்தில் அதிமுகவையும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்து காட்சிகள் இருப்பதாக கூறி, அதிமுக நிர்வாகிகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், குறிப்பிட்ட அக்காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரிய அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டு பிரச்னை முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் சமூக ஊடகங்களில் கடந்த சில நாள்களாக ஒரு விடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்தக் காட்சியில் விஜய் ரசிகர்கள் எனக் கூறிக் கொண்டு இரு இளைஞர்கள், சர்கார் திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில், அரிவாளை காட்டியபடி பேசுகின்றனர். இதுகுறித்து பிரகாஷ் என்பவர், சென்னை பெருநகர காவல் துறையின் சைபர் குற்றப்பிரிவில் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அந்த நபர்கள் குறித்து பொதுமக்களுக்கு ஏதேனும் தகவல் தெரிந்தால் 044 - 2345 2348, 044 - 2345 2350 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என சென்னை காவல் துறை அறிவித்துள்ளது.