தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்?, காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சுகாதாரத்துறை முதன்மைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அவரது மனு:
தமிழகத்தில் கொசுவால் பரவும் நோய்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் அரசு எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனவே டெங்கு, பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்ட அளவில் போதிய நடவடிக்கை எடுக்கவும், அனைத்து மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் இதுவரை டெங்கு, பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை, இந்த நோய்களைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.