தமிழ்நாடு

அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும்: ராம.கோபாலன்

தினமணி

அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்டப்படும் என்று இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் நம்பிக்கை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம், பொங்கலூரில் டிசம்பர் 23ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெறும் சோடஷ மகாலட்சுமி மகா யாகம், 1008 கோமாதா பூஜை,  அஸ்வ பூஜை ஆகியவை நடைபெறுகின்றன. இதுதொடர்பாக கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் ரத யாத்திரை நடத்தப்படுகிறது. மகாலட்சுமி ரதம், கோமாதா ரதம், சிவபார்வதி ரதம், வீரலட்சுமி ரதம் என்ற நான்கு ரதங்கள் செவ்வாய்க்கிழமை பயணத்தைத் துவக்கின.

இந்த ரத யாத்திரையின் தொடக்க விழா, காந்தி பூங்கா, முருகன் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இந்து முன்னணியின் நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன், தென்னிந்திய அமைப்பாளர் ஜெகதீஷ் காரந்த்,  ஸ்ரீமத் அஹோபில மடம் ஆஸ்தான ஜோதிடர் ஏ.எம்.ராஜகோபாலன், மாநில அமைப்பாளர் க.பக்தவத்சலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், வராஹி மந்திராலய பீடாதிபதி மணிகண்ட சுவாமிகள் ஆகியோர் ரத யாத்திரையைத் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ராம.கோபாலன் பேசுகையில், ""ஆன்மிகத்தின் மூலமாகவும், வழிபாட்டின் மூலமாகவும் மக்கள் ஒன்றாகச் சேர வேண்டும், விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. அங்கு 1008 நாட்டு மாடுகளுடன் நடைபெற உள்ள யாகத்துக்காக  மக்கள் பசு நெய், செங்கற்களை வழங்க வேண்டும்'' என்றார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதிலும் பசுக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக இதுபோன்ற யாகங்கள் நடைபெறுகின்றன. உத்தரப்பிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் விரைவில் கட்டப்படும் என்று நம்புகிறேன் என்றார்.   மாநிலச் செயலாளர் ஜே.எஸ்.கிஷோர்குமார், கோவை மாவட்டத் தலைவர் கே.தசரதன் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT