இடைத்தேர்தலை எதிர்கொள்ள ஆளும் அரசு தயாராக இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.
நவம்பர் புரட்சி தின விழா மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில மாநாட்டு வரவேற்புக்குழு அமைப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கலந்து கொண்ட பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாடு 2019 பிப். 11-ஆம் தேதி சேலத்தில் நடைபெறுகிறது.
விவசாயிகள் தற்போது அதிகளவிலான கடன் சிக்கலில் தவித்து வருகின்றனர். வறட்சி பாதித்த விவசாயிகளின் கடன் பிரச்னை தீரவில்லை. 2014-இல் பிரதமராக பதவியேற்ற மோடி, விவசாயிகளுக்கு இரட்டிப்பு விலை வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், விவசாயத்துக்கான இடுபொருள்கள் உரம், பூச்சிகொல்லி மருந்து ஆகியவற்றின் விலை 60 சதவீதம் உயர்ந்து விட்டது.
ஆந்திரத்தில் 33 கி.மீ. தொலைவு ஓடும் பாலாறு அணையில் 22 தடுப்பணைகளைக் கட்டி உள்ளனர். மேலும், பல தடுப்பணைகள் கட்ட அந்த மாநில அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் நீர் மேலாண்மை திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படவில்லை.
தருமபுரி வேளாண் பல்கலைக் கழக மாணவியர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய ஆளுங் கட்சியைச் சேர்ந்த மூவரை விடுவிக்க தமிழக அரசு அக்கறை காட்டி வருகிறது. ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் 7 பேரை விடுவிக்க அக்கறை காட்டாமல் இருப்பது நேர்மை இல்லை.
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறுவது எளிதல்ல. தேர்தலை எதிர்கொள்ள ஆளும் அரசு தயாராக இல்லை. தோற்று விடுவோம் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாது என்றார்.