எழும்பூர் ரயில் நிலையத்தில் தவறி விழுந்த பயணியை ரயில்வே போலீஸ் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த திங்கள்கிழமை ராமேஸ்வரத்தில் இருந்து ஃபைஸாபாத் வரை செல்லும் ஷரத்தா சேது ரயில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 5-ஆம் நடைமேடையில் இருந்து மதியம் 1 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. அப்போது அந்த ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் தவறி விழுந்தார்.
இந்நிலையில், ரயிலின் கீழ் சிக்கும் நிலையில், அங்கு பணியில் இருந்த ரயில்வே போலீஸ் சுமன், துரிதமாகச் செயல்பட்டு அவரைக் காப்பாற்றினார். இதையடுத்து அப்பயணிக்கு எக்காயங்களும் இன்றி அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.
இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அந்த ரயில்வே போலீஸின் செயல் பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.