கடலூர்: வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் கடலூர் - பாம்பன் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடலூர் மாவட்ட பேரிடர் கால சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடலூரில் தாழ்வான பகுதி மக்களை இரவுக்குள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் உள்ள செல்போன் டவர்களை கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூரில் 84 ஆயிரம் ஹெக்டேர் பயிர்களையும் கஜா புயல் கரையைக் கடப்பதற்கு முன்பு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் செல்போன்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். 2, 3 நாட்களுக்குத் தேவையான குடிநீரை சேமிப்பில் வைத்துக் கொள்ளுங்கள். கஜா புயலின் போது காற்று வேகமாக வீசினால் மின்கம்பங்கள் சாயலாம் என்பதால் செல்போன்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்வது அவசியம்.
கஜா புயலை சமாளிக்க தமிழக பொதுப்பணித்துறை மூலம் ரூ.140 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தாணே புயல் போன்று கஜா புயல் இருக்காது என்பதால் பொதுமக்கள் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று ககன்தீப் தெரிவித்துள்ளார்.