கஜா புயல் இன்று (வியாழக்கிழமை) கரையைக் கடக்கவுள்ள நிலையில், எது செய்யவேண்டும், எது செய்யக்கூடாது என்பதை விளக்கும் வகையில் தமிழக அரசு விழிப்புணர்வு விடியோவை வெளியிட்டுள்ளது.
கஜா புயல் பாம்பன் - கடலூர் இடையே நாகைக்கு அருகில் இன்று இரவு கரையைக் கடக்கவுள்ளது. புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழக அரசு மீட்பு குழுவினர், மருந்து உதவி சேவை, அவசர கால சேவை உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்துள்ளது. கரையக்கடக்கவுள்ள கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் மாலைக்குள் வீடு திரும்பவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை பேருந்து சேவை நிறுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 80 முதல் 100 கி.மீ வரை வீசலாம் என்பதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது, மின்கம்பங்கள் மற்றும் மரங்களுக்கு அருகே செல்லக்கூடாது என பல எச்சரிக்கைகளை அரசு விடுத்துள்ளது.
இதற்கிடையே, புயல் போன்ற பேரிடர் காலங்களில் எது செய்யவேண்டும், எது செய்யக்கூடாது என்பதை எளிமையான முறையில் எடுத்து விளக்கும் வகையில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் ஒரு விழிப்புணர்வு விடியோ வெளியிடப்பட்டுள்ளது.