சென்னை: கஜா புயல் கரையைக் கடக்கும் பகுதியை சுற்றியுள்ள 6 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்களை விரைவாக வீட்டுக்கு அனுப்ப தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் இன்று இரவு 8 - 11 மணிக்குள் நாகைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள் அனைத்தும் தங்களது ஊழியர்கள் 4 மணிக்குள் வீட்டுக்குச் செல்லும் வகையில் 3 அல்லது 3.30 மணிக்குள் அனுப்பிவிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நாகை மாவட்டத்துக்கு 4 பேரிடர் மேலாண்மை குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.