இம்மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி.பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக பிரமுகர் இல்ல திருமண விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் 38,640 கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் அவை எந்தெந்த கோயில்கள் என கேட்டால் தெரிவிக்க மறுக்கின்றனர். பழனிக் கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தாவிட்டால் பாஜக தொடர் தர்னா போராட்டத்தை நடத்தும். இந்த மாத இறுதியில் ஓய்வுபெறவுள்ள சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி. பொன். மாணிக்கவேலுக்கு தமிழக அரசு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன், சட்டப்பேரவை இடைத்தேர்தலையும் நடத்தினால் நல்லது. தேர்தல் வந்தவுடனே மூன்றாவது அணி கிளம்புவது வழக்கம். அவர்கள் இல்லாவிட்டால் தேர்தலில் நகைச்சுவை இருக்காது என்றார். பேட்டியின்போது, பாஜக விவசாய அணி நிர்வாகி திருமலைசாமி, மாவட்ட செயலாளர் கனகராஜ், மாநில தலைவர் சீனிவாசன் உள்பட பலர் உடனிருந்தனர்.