கஜா புயல் இன்று மாலை அல்லது இரவு கரையை கடக்கும் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மாநில அவசர கட்டுபாட்டு மையத்தில் புயல் முன்னெச்சரிக்கை தகவல் அறிவிப்பு திட்டத்தை சோதனை அடிப்படையில் அமைச்சர் உதயகுமார் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கஜா புயல் குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
நாகை, கடலூரில் புயல் முன்னெச்சரிக்கை அறிவிப்பு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. ரூ.50 கோடி மதிப்பீட்டில் இந்த எச்சரிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. புயல் குறித்து பிரத்யேக அவசர தகவலை மக்களுக்கு உடனடியாக தெரிவிக்க இந்த மையங்கள் உதவும்.
32 மாவட்டங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து கண்காணித்து வருகிறார்கள். கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 14 கிலோ மீட்டர் வேகத்தில் கஜா புயல் நகர்ந்து வருகிறது.
இன்று மாலை அல்லது இரவு கஜா புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கஜா புயல் கரையை கடக்கும் போது குடிசைகள் சேதமடையக்கூடும். மின்சாரம், தொலைத்தொடர்பு துண்டிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.