ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பான விசாரணை ஆறு மாதங்களில் முடிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் புதன்கிழமை தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி 2016 ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் இறுதி நாளில் போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கலவரம் நடைபெற்றது. இதுதொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையத்தின் முன்பு பொதுமக்கள், போலீஸார், பாதிக்கப்பட்டவர்கள் என பல தரப்பினரும் நேரில் ஆஜராகி தங்கள் கருத்துக்களையும், வாதங்களையும் முன்வைத்தனர். மதுரையில் புதன்கிழமை 12 ஆவது கட்ட விசாரணை தொடங்கியது. இந்த விசாரணை நவ.16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
விசாரணை குறித்து நீதிபதி ராஜேஸ்வரன் செய்தியாளர்களிடம் கூறியது: ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக சென்னையில் 75 பேரிடமும், மதுரையில் 850 பேரிடமும் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. ஆறு மாதத்துக்குள் விசாரணை முடிக்கப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும். புதன்கிழமை தொடங்கிய விசாரணையில் திரைப்பட இயக்குநர் கெளதமன், நடிகர் லாரன்ஸ், இசையமைப்பாளர் ஆதி ஆகியோர் ஆஜராகி தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர் என்றார்.