தமிழகம் உள்பட நாடு முழுவதும் எத்தனை ரெளடி கும்பல்கள், கூலிப்படைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, ரௌடி வேலு வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில் மத்திய அரசின் உள்துறைச் செயலர், தமிழக காவல் துறை டிஜிபி ஆகியோரை தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கிறோம்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் எத்தனை ரெளடி கும்பல்கள் மற்றும் கூலிப் படைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன, இந்த கும்பல்களைத் தடுக்க அல்லது கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன, எத்தனை கொலைகள் நடந்துள்ளன, எத்தனை பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது, சென்னையில் இந்த கும்பல்களால் ஏற்படும் தாக்கம் என்ன, எத்தனை ரெளடிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, போலீஸ் உயர் அதிகாரிகளின் துணையோடு இயங்கி வரும் ரெளடி கும்பல்கள் எத்தனை, அரசியல் கட்சிகள் குற்றப் பின்னணி கொண்டவர்களை தங்களது கட்சியின் நிர்வாகிகளாக நியமித்துள்ளனவா என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்தக் கேள்விகளுக்கு மத்திய, மாநில அரசுகள் வரும் 30 -ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.