தமிழகத்தை தாக்கிய கஜா புயல் நிலவரம் தொடர்பாக, பிரதமர் மோடி தமிழக முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
தமிழகத்தை அச்சுறுத்தி வந்த கஜா புயல் நாகைக்கு தெற்கே இன்று காலை முழுவதுமாக தீவிரமாக கரையைக் கடந்தது. இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியதால் பலத்த சேதம் ஏற்பட்டது.
கஜா புயலால் மொத்தம் 26 பேர் உயரிழந்துள்ளனர். 29,500 மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. 81 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பேரிடர் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
புயல் கரையைக் கடந்ததை அடுத்து சேதங்களை சீரமைப்பதற்கான பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கஜா புயல் தொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமியிடம் பேசியதாக பிரதமர் மோடி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், அவர் தெரிவித்துள்ளதாவது,
"புயல் காரணமாக தமிழகத்தில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து முதல்வர் பழனிசாமியிடம் பேசினேன். தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளும் மத்திய அரசு சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளேன். தமிழக மக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்காக பிரார்த்திக்கிறேன்" என்றார்.
முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் தமிழக முதல்வர் பழனிசாமியிடம் தொலைபேசியில் பேசினார். அவர் தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.