கஜா புயலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது:
கஜா புயலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களை கணக்கிடும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கஜா புயல் சேதம் மதிப்பீடு கணக்கீடு செய்யப்பட்ட பின்பு தான் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தப்படும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக நடமாடும் 405 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கஜா புயலால் சாய்ந்த மரங்களையெல்லாம் நவீன இயந்திரங்களைக் கொண்டு அறுத்து, அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித் துறை மூலம் அங்குள்ள குளங்கள், ஏரிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் அங்கேயே தங்கியிருந்து அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடற்கரையோர மாவட்டங்களில் மூன்று நாள்களுக்கு முன்பே மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, மேற்பார்வைப் பணி நடைபெற்று வருகிறது என்றார்.