தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை நீடிக்கிறது.
கஜா புயல் தாக்கம் காரணமாக கும்பக்கரை அருவியில் கடந்த வெள்ளிக்கிழமையே வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதித்தனர். இப்பகுதியில் கொட்டித் தீர்த்த கன மழை காரணமாக அன்று மதியம் முதலே அருவியில் வரலாறு காணாத அளவில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்தது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் அருவியில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்தது. மேலும், அருவியில் கொட்டும் நீரில் கல், மரக் கட்டைகள் இழுத்து வரப்படுவதால் அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை நீடித்தது.
இதுதொடர்பாக தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் சுரேஷ்குமார் கூறியது:
காட்டாற்று வெள்ளம் காரணமாக கும்பக்கரை அருவியில் சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி வெள்ளிக்கிழமை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீரான நீர்வரத்து ஏற்படும் வரை தடை தொடரும் என்றார்.