தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவத்தில் தண்டனை பெற்ற அதிமுக பிரமுகர்கள் மூவர் தற்போது ஆளுநரின் ஒப்புதலோடு விடுதலை செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை:
தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கின் ஆயுள் தண்டனை குற்றவாளிகளான அதிமுகவினர் மூன்று பேரை, ஆளுநரின் ஒப்புதலோடு, தமிழக அரசு திங்கள்கிழமை வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்துள்ளது.
அதேநேரத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரை விடுவிக்கும் சட்ட வாய்ப்புகளும், உரிமைகளும் அதிகம் இருந்தும் அவர்கள் விடுதலையை தாமதிப்பது பாரபட்சமானதும், அரசியல் தன்மைமிக்கதும் ஆகும். அதிமுக அரசின் இந்தச் செயல் கண்டிக்கத்தக்கது.
ஏறத்தாழ 27 ஆண்டுகளாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயகுமார், ராபர்ட்பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழக அமைச்சரவையின் முடிவு. அந்த முடிவை நிறைவேற்றும் அடிப்படைப் பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.