தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் ராம்நாத் கோவிந்த் தமிழில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
கஜா புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தமிழக முதல்வரிடம் விசாரித்தேன். புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். புயலால் பாதிக்கப்பட்டோருக்கு, ஒட்டுமொத்த நாட்டு மக்களும், மத்திய அரசும் துணை நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
கஜா புயலால், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கஜா புயலுக்கு 45 பேர் உயிரிழந்துவிட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.