கோவையில் வைரஸ், பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு இருவர் உயிரிழந்தனர்.
கோவை, வடவள்ளியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (62). இவர் கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந் நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார்.
பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் சாவு: கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் காமராஜ் நகரில் வசித்து வந்தவர் கண்ணன் (44). இவர் கடந்த 10 நாள்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பதை உறுதி செய்த வட்டார சுகாதார அலுவலர் ராமராஜ், அவருக்கு மருந்துகள், அவரது குடும்பத்தினருக்கு சுகாதார அறிவுரைகளை வழங்கினர்.
இந்நிலையில், பன்றிக் காய்ச்சல் அதிகமானதால் கோவையிலுள்ள தனியார் மருத்துவமனையில் கண்ணன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வைரஸ், டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 66 பேர் உயிரிழந்துள்ளனர்.